Top
Begin typing your search above and press return to search.
கட்டுரை
3 நிமிட வாசிப்பு

தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கான இடம் என்ன?

முஸ்லிம்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பிரதிநிதித்துவம் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கான இடம் என்ன?
X

தமிழ்நாட்டின் இளம் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான ஆளூர் ஷா நவாஸ் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி நம் கவனத்தைக் கோருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான பாஜகவின் செயல்பாடுகளில் காங்கிரஸ், திமுக, விசிக போன்ற மதநல்லிணக்க முற்போக்குச் சக்திகள் அரண்போல் நிற்கின்றன. இது நல்ல விஷயம். அதேசமயம், முஸ்லிம்களுக்கு இத்தகைய தார்மிகப் பாதுகாப்பு மட்டும் போதாது; அவர்களுக்கு உரிய அதிகாரமும் வேண்டும். இந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்குப் பிறகு எல்லாக் கட்சிகளிலுமே, முஸ்லிம்களுக்கான இடமும் பிரதிநிதித்துவமும் குறைந்துவருகிறது. இது மிகவும் கவலை அளிக்கும் போக்கு என்று ஆளூர் ஷா நவாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் பேசியிருக்கும் விஷயம் உண்மையில் நாம் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தேசிய அளவிலான சரிவு

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய பாஜகவின் எழுச்சியும், அவர்களது ‘முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை’ என்ற வெளிப்படையான அரசியல் போக்கும் இச்சரிவை வேகப்படுத்தியுள்ளது.

1980: 49 எம்பிக்கள் (9.04%)

2009: 28 எம்பிக்கள் (5.15%)

2014: 22 எம்பிக்கள் (4.05%)

2024: 24 எம்பிக்கள் (4.4%)

பாஜக முஸ்லிம் வேட்பாளர்களைத் தவிர்ப்பது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சிகளும் "பெரும்பான்மை வாக்குகளை இழக்க நேரிடும்" என்ற அச்சத்தில் முஸ்லிம்களுக்கு சீட் கொடுப்பதைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.

தமிழ்நாட்டின் நிலை என்ன?

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டிலும் தற்போது இதே நிலை தொடர்வது வருத்தமளிக்கிறது. 1962 வரை சென்னை மாகாண காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முஸ்லிமுக்குக் கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனை அண்ணா சுட்டிக்காட்டிய பின்னர்தான், 1962இல் மூன்றாவது முறையாகக் காமராஜர் முதல்வரானபோது, கடையநல்லூர் மஜீத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதே ஆண்டில் திமுக உதவியுடன் அப்துல் வஹாப் ஜானியும் சென்னை மாகாண மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967இல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் எஸ்.ஜே.சாதிக் பாட்சா அமைச்சரானார். இந்த வரிசையில், ரகுமான் கான், உபாயத்துல்லா, மைதீன்கான் ஆகியோர் மு.கருணாநிதியின் அமைச்சரவையில் இடம்பெற்றனர். இதேபோல், எம்ஜிஆர் ஆட்சிக் காலங்களிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்திலும் அமைச்சரவையிலும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. 1977, 1980, 1984 என எம்ஜிஆரின் மூன்று அமைச்சரவைகளிலும் கே. ராஜா முகமது, ஒய்.எஸ்.எம்.யூசுப் போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் முக்கியப் பொறுப்புகளை வகித்தனர்.

விகிதாச்சார இடைவெளியும் அதிகாரப் பகிர்வும்

தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 7 முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

தமிழக மக்கள்தொகையில் சுமார் 5.86% முஸ்லிம்கள் உள்ள நிலையில், 234 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அவர்களின் விகிதாச்சாரப்படி குறைந்தபட்சம் 14 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7 பேர் (3%) மட்டுமே உள்ளனர். மக்கள்தொகை வளர்ந்துள்ளபோதிலும், அதற்கேற்ற அரசியல் பிரதிநிதித்துவம் சரிவை நோக்கியே சென்றுள்ளது.

மறுபுறம், முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்குச் ‘சிறுபான்மையினர் நலத்துறை’ போன்ற பெயரளவிலான துறைகளே ஒதுக்கப்படுகின்றன.

2007இல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5% இட ஒதுக்கீடு ஒரு முக்கிய மைல்கல் என்றாலும், அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சமூக நீதியை முன்வைக்கும் தமிழ்நாட்டில், முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்துக் கட்சிகள் சிந்திக்க வேண்டியது தார்மிகப் பொறுப்பு இல்லையா?


Next Story

மேலும் படிக்க

All Rights Reserved. Copyright @2019
Share it