Top
Begin typing your search above and press return to search.

ஏ.ஆர். ரஹ்மான்: ஒலியின் எல்லைகளைக் கடந்த இசைப் பயணம்

60 வயதில் அடியெடுத்துவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்: ஒலியின் எல்லைகளைக் கடந்த இசைப் பயணம்
X

தமிழ்த் திரையிசையின் வரலாறு என்பது வெறும் ராகங்களின் கோவை மட்டுமல்ல; அது ஒவ்வொரு தலைமுறையின் ஆன்மாவையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி.

1930களில் கர்னாடக இசையின் பிடியில் இருந்த திரையிசை, 1950களில் எம்.எஸ்.வி - ராமமூர்த்தி இணையின் வருகையால் 'மெல்லிசை' என்னும் எளிய மற்றும் இனிமையான வடிவத்தை அடைந்தது. அதன் பிறகு, 1970களின் இறுதியில் இளையராஜா என்ற மகா கலைஞர் தோன்றி, கிராமிய மணத்தையும் மேற்கத்திய செவ்வியல் இசையையும் பிணைத்து ஒரு மாபெரும் சகாப்தத்தை உருவாக்கினார். அந்த ஆலமரத்தின் நிழலில் மற்ற தாவரங்கள் வளர முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலகட்டத்தில், 1992இல் 'ரோஜா' படத்தின் மூலம் ஒரு புதிய ஒலியியல் புரட்சியைத் தொடங்கி வைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

2026ஆம் ஆண்டில், ரஹ்மான் தனது 60ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கடந்த 34 ஆண்டுகளாக அவர் இந்திய இசையை உலக வரைபடத்தில் நிலைநிறுத்திய விதம் தனித்துவமானது. அப்படி என்னதான் தனித்துவத்தை அவர் கொண்டிருக்கிறார்.

ஒரு புதிய ஒலியியல் ஒழுங்கு (Soundscapes)

ரஹ்மானுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் மெல்லிசை மற்றும் சாஸ்திரிய இசை மரபுகளில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ரஹ்மான், மேற்கத்திய பாப் (Pop), எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் (EDM), மற்றும் உலகளாவிய நாட்டார் இசை (World Folk) ஆகியவற்றின் கூறுகளை இந்திய உணர்வுகளுடன் கலந்தார். அவர் வெறும் பாடல்களை மட்டும் தரவில்லை; மாறாக ஒரு புதிய 'ஒலி அனுபவத்தை' (Sonic Experience) வழங்கினார். இதனால்தான், மொழி தெரியாத வெளிநாட்டினராலும் ரஹ்மானின் இசையை எளிதில் அணுக முடிந்தது. இந்தியச் செவ்வியல் இசையை உலகளாவிய பாணியில் அவர் 'பேக்கேஜ்' செய்த விதம் அவரை ஒரு உலகளாவிய பிம்பமாக மாற்றியது.

மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான உரசல்

எந்தவொரு புதிய மாற்றமும் தொடக்கத்தில் நிராகரிப்பைச் சந்திக்கும். ரஹ்மான் வந்தபோது, "இது இசை அல்ல, வெறும் மெஷின் சத்தம், கணினி இசை" என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அன்றைய இளம் தலைமுறைக்கு இந்த விமர்சனமெல்லாம் இல்லை. ரஹ்மானை ஆரத்தழுவிக்கொண்டார்கள். இளையராஜாவைத் தெய்வமாகப் பார்த்த ஒரு தலைமுறைக்கு, ரஹ்மானின் டிஜிட்டல் இசை அந்நியமாகத் தெரிந்தது. ஆனால், எம்.எஸ்.வி-யின் சகாப்தத்தில் இளையராஜா எப்படி ஒரு தவிர்க்க முடியாத புதுமையோ, அதேபோல இளையராஜாவின் காலத்தில் ரஹ்மான் ஒரு நவீனத் தேவையாக இருந்தார். இன்று ரஹ்மான் தனித்த ஒரு மரபாக மாறிவிட்டார். அந்த மரபுதான் இன்று சந்தோஷ் நாராயணன், அமித் திரிவேதி போன்ற நவீன இசையமைப்பாளர்களுக்கு ஒரு பரந்து விரிந்த தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

சூஃபி இசையும் ஆன்மீக விடுதலையும்

ரஹ்மானின் இசைப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் அவரது சூஃபித்துவ அணுகுமுறை. எல்லையற்ற அன்பைப் போதிக்கும் சூஃபி ஞானம், ரஹ்மானின் இசையை ஒரு ஆன்மீகத் தளத்துக்கு அழைத்துச் சென்றது. குறிப்பாக இந்தி திரையுலகுக்குச் சென்ற பிறகு, 'ஜோதா அக்பர்', 'ராக்ஸ்டார்', 'டெல்லி-6' போன்ற படங்களில் அவர் வழங்கிய கவ்வாலிகளும் பாடல்களும் வெறும் வரிகள் அல்ல; அவை ஒரு தியானம். 'குன் ஃபயா குன்' (ராக்ஸ்டார்), தீவானா (தேரே இஸ்க் மெய்ன்) போன்ற பாடல்கள் மனிதர்களின் அகங்காரத்தை உடைத்து, பிரபஞ்சத்துடன் பிணைக்கின்றன.

மறுபுறம், ரஹ்மானிடம் குதூகலமான ஒரு 'ஹிப்பி' மனநிலையும் உண்டு. 'ஊர்வசி ஊர்வசி’ (காதலன்), ‘முக்காலா’ (காதலன்), ‘ரங்கீலா ரங்கீலா’ (ரங்கீலா), 'லூஸ் கண்ட்ரோல்' (ரங் தே பசந்தி), 'மசாக்கலி' (டெல்லி 6), ‘படக்க குடி’ (ஹைவே) போன்ற பாடல்கள் சமூகத்தின் இறுக்கமான வரையறைகளைத் தகர்த்து, தற்காலிக சந்தோஷத்தில் திளைக்கச் செய்பவை. அர்த்தமற்ற வரிகள் (Nonsense lyrics) என்று விமர்சிக்கப்பட்டாலும், அவை தரும் விடுதலை உணர்வு ஈடு இணையற்றது.

குரல் தேர்வுகள் மற்றும் 'அன்-கன்வென்ஷனல்' பாடகர்கள் ரஹ்மானின் மிகப்பெரிய பலம். அவர் பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம் அலாதியானது. வழக்கமான கர்னாடக சங்கீதப் பயிற்சி பெற்ற பாடகர்களைத் தாண்டி, சற்றும் எதிர்பாராத குரல்களை அவர் அறிமுகப்படுத்துவார். ஒரு பாடலின் உணர்ச்சிக்கு எந்த மாதிரியான குரல் தேவை என்பதை அவர் நுணுக்கமாகக் கவனிப்பார். 'கடல்' படத்தில் சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் ‘நெஞ்சுக்குள்ளே’ பாடலைப் பதிவு செய்ததோ அல்லது பென்னி தயாள் போன்ற மேற்கத்திய சாயல் கொண்ட குரல்களைப் பயன்படுத்தியதோ அவரது துணிச்சலான தேர்வுகள். குறிப்பாக, பாடகர்களின் குரலில் இருக்கும் குறைகளை அவர் நீக்க முயலாமல், அதையே அந்தப் பாடலின் அழகாக மாற்றுவார்.

'காதலன்' படத்தில் பி.உன்னிகிருஷ்ணன் போன்ற ஒரு செவ்வியல் பாடகரை ‘என்னவளே’ போன்ற ஒரு நவீன மெட்டுக்குப் பயன்படுத்தியதும், 'காற்றும் வெளியிடை' படத்தில் ‘வான் வருவான்’ பாடலுக்கு சாஷா திருப்பதியின் மெல்லிய குரலைப் பயன்படுத்தியதும் அவரது நுணுக்கமான தேர்வுக்குச் சான்றுகள். இதனால் அவரது பாடல்கள் ஒருவிதமான, இயல்பான உணர்வைத் தரும்.

ரஹ்மான் என்றால் இரைச்சல் என்ற தவறான பிம்பம் இருந்தது. அது தவறான பார்வை. நிசப்தத்தைப் பயன்படுத்துதல் என்ற கலையில் தேர்ந்தவர் ரஹ்மான். இசை என்பது ஒலிகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது ஒலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியும் கூட என்பதை ரஹ்மான் நன்கு அறிந்தவர். அவரது பாடல்களில் பல இடங்களில் இசை திடீரென நின்றுவிடும் அல்லது மிக மெல்லிய நிலைக்குச் செல்லும். இந்த 'நிசப்தம்' கேட்பவரின் மனதில் ஒருவித எதிர்பார்ப்பையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும். உதாரணமாக, ’ரோஜா’ படத்தில் ‘புது வெள்ளை மழை’ பாடல் மிக மென்மையாகத் தொடங்கி, மெல்ல மெல்ல வளர்ந்து, சரணத்தின் உச்சகட்டத்தில் பிரம்மாண்டமாக ஒலிக்கும். 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் வரும் ‘தாய் மண்ணே வணக்கம்’ பாடல் தொடக்கத்தில் அமைதியாகவும், இறுதியில் ஒரு பெரும் முழக்கத்துடன் முடிவதும் இந்த நுணுக்கத்துக்குச் சிறந்த உதாரணம். இந்த நுணுக்கம் கேட்பவரை அறியாமலேயே அந்தப் பாடலோடு ஒன்றச் செய்துவிடும்.

ஒலியின் அடுக்குகளும் நுணுக்கமான பின்னணி இசையும் ரஹ்மானின் பெரும் பலம். ரஹ்மானின் பாடலை ஒருமுறை கேட்கும்போது ஒரு சாதாரண மெட்டு மட்டுமே காதில் விழும். ஆனால், மீண்டும் மீண்டும் கேட்கும்போதுதான் அதன் பின்னணியில் அவர் சேர்த்திருக்கும் பல அடுக்குகள் நமக்குப் புரியும். ஒரு சிறிய புல்லாங்குழல் சத்தம் அல்லது எங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும் சிறு அதிர்வு என ஒவ்வொரு முறையும் ஒரு புதிய ஒலியை நாம் கண்டறிய முடியும். அவர் தனது பாடல்களில் 'Texturing' எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்துவார்; அதாவது வெவ்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒரு புதிய ஒலியை உருவாக்குவார். இதனால்தான் ரஹ்மானின் பாடல்கள் பல ஆண்டுகள் கடந்தும் நமக்குச் சலிக்காமல் புத்துணர்வைத் தருபவையாக இருக்கின்றன.

விருதுகளும் அங்கீகாரங்களும்

ரஹ்மானின் திறமைக்குச் சான்றாக அவரது விருதுப் பட்டியல் உலக அளவில் நீள்கிறது:

ஆஸ்கார் விருதுகள் (2009): 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள்.

கிராமி விருதுகள் (2010): இரண்டு கிராமி விருதுகளை வென்ற முதல் இந்திய இசையமைப்பாளர்.

தேசிய விருதுகள்: இதுவரை 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

கோல்டன் குளோப் & பாஃப்டா: சர்வதேச அளவில் மதிப்புமிக்க இவ்விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.

பத்ம பூஷண் (2010): இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்று.

உள்ளூர் விருதுகள், சர்வதேச விருதுகள் என்று 170க்கும் மேற்பட்ட விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வென்றிருக்கிறார்.

60 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஹ்மான், நம்மைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவரது இசை நமக்குத் தரும் விடுதலை உணர்வும் குதூகலமும் என்றும் சலிக்காதவை. ஒரு காலத்தில் 'வெறும் சத்தம்' என்று ஒதுக்கப்பட்ட அதே இசை, இன்று உலக அரங்கில் இந்தியாவின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தத் தமிழ் ஒலியின் பயணம் இன்னும் பல காலம் தொடரட்டும்.

கட்டுரையாளரின் ரசனையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 10 சிறந்த ஆல்பங்கள்

(இது தரவரிசைஅல்ல)

1. ரோஜா

2. காதலன்

3. மின்சாரக் கனவு

4. விண்ணைத் தாண்டி வருவாயா

5. ஓ காதல் கண்மணி

6. ரங்கீலா

7. தில் ஸே (உயிரே)

8. ரங் தே பசந்தி

9. ஜோதா அக்பர்

10. டெல்லி-6


Next Story

Related Stories

All Rights Reserved. Copyright @2019
Share it